மைசூரு

மிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று டில்லியில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 12-ம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் இரு அணைகளிலிருந்து 4,293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6,398 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4,398 கன அடியும் கபினி அணையிலிருந்து 2,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்துக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 6,398 கன அடியாக உயர்ந்துள்ளது.