சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபில்காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,  அதாவது 2016 மற்றும் 2021  ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக, தற்போது ஆட்சியில் உள்ள ஆம்ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து, முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர் 10, 2022 அன்று மாநில முதல்வர் பகவத்சிங் மான் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பல்வேறு விசாரணைகள் நடைபெற்றன. இதில்,  பல  முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக கூறப்பட்டது.

இதில், 2006ம் ஆண்டு ஏப்ரல் 1, முதல் மார்ச் 31, 2022 வரை, முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.சோனி  மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டன.  காங்கிரஸ் துணைமுதல்வர்  ஓபி சோனி தனது மனைவி சுமன் சோனி மற்றும் மகன் ராகவ் சோனி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளது தெரிய வந்த நிலையில், அவர்மீது   ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு  செய்யப்பட்டு, ஓ.பி.சோனி கைது செய்யப்பட்டார்.

 சண்டிகரில் கைது செய்யப்பட்டா சோனியை, பின்னர் அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர்  இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.  இந்த சம்பவம் காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.