புதுச்சேரி

புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது.  அது இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.  இதற்கு புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையரே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.   இதையொட்டி அவர் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.   புதுச்சேரி முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி ஒரு காணொளி தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

“உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால், அது சமூக நீதிக்கு எதிரானது. ஏன் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த  முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார். அதற்கு விளக்கம் தரவேண்டும்.

அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசித்தும், சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்டும் உள்ளாட்சித் தேர்தலைப்  புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.  புதுச்சேரி தேர்தல் ஆணையர்  தன்னிச்சையாகச் செயல்படுகிறார். 

ஆணையர் ராய் பி தாமஸுக்குத் தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. வனத்துறை அதிகாரியை ஆணையராக நியமித்தது கிரண்பேடிதான். உச்சநீதிமன்றத்தில் தாமஸ் நியமனத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகச் செயல்பட்டதால், இரண்டு முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தடை உத்தரவு தரப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு இது வெட்கக் கேடு. உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்படக் காரணமானதற்குப் பொறுப்பு ஏற்று மாநில தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்.  அவர் அவ்வாறு செய்யாவிட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும்.”

எனத் தெரிவித்துள்ளார்.