புதுச்சேரி: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபோன், ஐபேட், கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார். இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது புதுச்சேரி மாநிலம். இங்கு பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் என்.ஆர்.ரங்கசாமி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வசதிகளை புதுச்சேரி மாநில அரசு வழங்கியுள்ளது. மொத்தம் சுமார் இரண்டரை கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் சட்டமன்ற அலுவலகத்துக்கும் தேவையான பொருட்கள் வாரி வழங்கப்பட்டு உள்ளன.  ஐபோன்கள், ஐபேட்கள், ஐமேக் டெஸ்க்டாப்கள் (ஆப்பிள் கம்ப்யூட்டர்), போட்டோ காப்பியர்கள், பிரிண்டர்கள், சோபா செட்கள், அலமாரிகள் மற்றும் நாற்காலிகள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபோன், ஐபேட் வழங்கினார்.  இதற்காக  புதுச்சேரி சட்டசபை செயலகம் ரூ.2.5 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.