புதுச்சேரி

த்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளருக்கு விருது  வழங்க உள்ளது.

ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.  அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெற உள்ளோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதில் புதுச்சேரி மாநில லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வாளராக பணிபுரியும் கண்ணன் சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரி கோரிமேடு பகுதியில் நடந்த இரு இரட்டைக் கொலை வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கித் தந்தார்.

அவருடைய இந்த பணிக்காக இந்த விருது அளிக்கப்பட உள்ளது.  இது குறித்த மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்டு இவருக்கு டிஜிபியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.  ஆய்வாளர் கண்ணனுக்கு காவல்துறையினர் பாராட்டுகள் வழங்கி உள்ளனர்.