சென்னை

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட .பொதுமக்கள் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது பெரம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மின்தடை ஏற்பட்டதுடன் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தங்களது பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் தண்ணீரை வெளியேற்றத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் கேட்டனர். மேயர் பிரியா அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

அவர்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால் தண்ணீர் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் உறுதி அளித்தார். எனவே பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தைத் திரும்பப் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.