கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

 

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.

இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மார்ச் 2 ம் தேதி வெளியானது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஒரு வரலாற்றுப் படத்தின் போஸ்டருக்கு எதிர்பார்த்த அளவுக்கு எந்த ஒரு ஈர்ப்பும் அர்த்தமும் இல்லை என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர் விக்ரம் போஸ்டர் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

– சோமாஸ்