சென்னை; பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை,  மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளர். அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சர் பல்டி அடித்துள்ளார்.

சென்னையில் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. விராங்கனை உயிரிழப்புக்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கள்தான் காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழகஅரசும் கூறி வந்தது. மருத்துவர்கள்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்த மருத்துவர்களுக்கு ஜாமின் கிடைப்பதும் தடுக்கப்பட்டது.

இதைடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சங்கத்தினர், மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் குதிப்பர் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று  சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்; கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு காம்ப்ரஸின் பேண்ட் என்ற சொல்லப்படக்கூடிய கட்டுப் போடப்பட்டுள்ளது. இந்த கட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்கானது. அதை உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிமேல் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் பணியாற்றி வருகிறோம் என்றவர்,  மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. ஆகையால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம்! மருத்துவர்கள் சங்கம் பகிரங்க மிரட்டல்…