டெல்லி:

எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இந்தியை கட்டாயமாக திணிக்கிறது என்று இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்தி மொழி தொடர்பாக வெங்கையா நாயுடு எழுப்பிய சர்ச்சை ஓயாத நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இந்தி தான் நமது தாய்மொழி. அதுதான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் கண்டனத்திற்கு ஆளானது.

இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்து போராடும் என அந்த மாநில முதல்-வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா பேசுகையில், “இந்தி திணிப்பை கர்நாடக மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே மெட்ரோ ரெயில்களில் இந்தி பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில் திட்டம் ஒன்றும் மத்திய அரசின் திட்டம் கிடையாது. மெட்ரோ திட்டத்திற்கு பெரும்பங்கு தொகை மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்தி வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படுகிறது. அதற்காக இந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது. இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி. இந்தியை நாட்டு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்துக்கு கண்டிக்கத்தக்கது. இதனை ஒதுபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார்.