சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கிராம மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வந்த  அறப்போராட்டத்தை, சட்டப்போராட்டத்தை நடத்தப்போவதாகஅறிவித்துள்ளதுடன்,  நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், வாக்கு சேகரிக்க தங்களது பகுதிக்குள் எந்தவொரு  அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம் என  பரந்தூர் போராட்ட குழு அறிவித்து உள்ளது.

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரு ஆண்டுகளாக அறப்போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்துக்கு  அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும்,  தங்களது வாழ்வாதாரத்தை காக்க, பகலில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை திரும்பியதும் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

பரந்தூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏகனாபுரம் ஊர் மக்களும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கமும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தி வந்தனர். ஆனால், திமுக அரசு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தீவிரம காட்டியதுடன், மக்களின் போராட்டத்தை மதிக்காமல், நில கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பை  வெளியிட்டது.

அதில், அண்மையில் வெளியான அரசாணையில் 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2682.62 ஏக்கர் WETLANDS(வேளாண் நிலம்+நீர்நிலை) என்பது அதிர்ச்சியளிக்கிறது. விமான நிலையைம் வந்தால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திட்டங்கள், கட்டுமானங்கள், அடிப்படை வசதிகள் எழுப்ப நிலம் பயன்படுத்தப்படும்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு ஆரம்பத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த 4563 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக கூறியது அந்த பகுதி மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதனால்,  தங்கள் விளைநிலங்கள் பாதிக்கக் கூடும். நீர்நிலைகள் அழியும் சூழல் உருவாகும். இதனால், ஒட்டுமொத்தமாக தங்களது வாழ்வாதாரமே பாதிக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால், அரசை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பேரணியாக சென்று வயல்வெளிகளில் இறங்கி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 கிராமங்களில் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளதாக இதுவரை நாளிதழ்களில் வெளியான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  திமுக  அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று வயல்வெளியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் காரணமாக அங்கு 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலர்மீது வழக்குகளும் பதியப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிகளுக்கு வெளியாட்கள் வர முடியாதவாறு, காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து தொடர் போராட்டம் கைவிடப்படுவதாகவும், சட்ட போராட்டம் தொடங்க உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் 600 நாளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் சட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ள போராட்ட குழுவினர், நடைபெற உள்ள  நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம் எனவும்  தெரிவித்துள்ளனர்.