பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில்  இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் விரைவில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. ‘அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரங்களை தொடங்கியுள்ளது.  மக்களின் குரல் என்ற பெயரிலான யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையானது, வட கர்நாடகாவில் உள்ள பெலகவியில் மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ரான சித்தராமைய்யாவும் இணைந்து  வரும் 29ம் தேதி வரை ஒரே பேருந்தில் பயணித்து இந்த பிரச்சார யாத்திரையை மேற்கொண்டு வருகன்றனர்.  அதன் பிறகு இருவரும் தனித்தனியாக யாத்திரை மேற்கொள்வார்கள்.

மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் தென் பகுதியிலும், சித்தராமைய்யா வட பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

தேர்தல் பிரச்சார யாத்திரை தொடங்கிய நிவைலயில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள குற்றப்பத்திரிகை  வெளியிடப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மக்கள் தெரிவிக்கும் வகையிலான இணையதளமும் தொடங்கி உள்ளது.

மக்களின் குரல்  யாத்திரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், ”இந்த யாத்திரை மக்களின் ஏக்கங்களை பேசுவதாக இருக்கும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தோல்விகள் குறித்தும், காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்தும் நாங்கள் எடுத்துக்கூறுவோம். மக்களின் ஆசீர்வாதத்தை நாடி இந்த யாத்திரையை நாங்கள் மேற்கொள்வதாகவும் . கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதன் மூலம் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி மக்களிடம் கூறுவோம். பாஜக அரசின் ஊழல்கள், இவர்கள் பெறும் 40 சதவீத கமிஷன், அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல் இவர்கள் எவ்வாறு கொள்ளையடிக்கிறார்கள் என்பவை உள்பட அனைத்தையும் மக்கள் மத்தியில் முன்வைப்போம்.” என தெரிவித்தார்.

அதுபோல முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா,  ”கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மிகவும் பலவீனமான முதல்வராக உள்ளார். கர்நாடகாவில் இதுவரை இருந்த முதல்வர்களில் இவரைப் போல பலவீனமானவர்கள் யாரும் இல்லை. மத்திய அமைச்சர்களைக் கண்டால் அச்சமடைபவராக இவர் இருக்கிறார். கர்நாடகாவுக்கு ரூ. 5,495 கோடி சிறப்பு நிதியாக அளிக்க 15வது நிதிக்குழு பரிந்துரை அளித்தது.

ஆனால், அதை வழங்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டார். அந்த நிதியைப் பெற துணிவில்லாதவராக பசவராஜ் பொம்மை உள்ளார். அதோடு, இந்த அரசு கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று மாநிலத்திற்கு மிகப் பெரிய கடன் சுமையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 83,000 கடன் சுமையை இந்த அரசு ஏற்றியுள்ளது. இப்படி இருந்தால் மாநிலம் எவ்வாறு முன்னேறும்?” என கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்கருவில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில்  கலந்துகொண்டு பேசிய பிரியங்கா காந்தி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். மேலும்,மக்களை கவரும் வகையான பல அறிவிப்புகள்  தேர்தல் அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் 16ந்தேதி அனறு நடைபெற்ற  “நா நாயகி” மகளிர் மாநாட்டில் உரையாற்றிய பிரியங்கா, “நா நாயகி” மாநாட்டின் பெரிய திட்டம் கிருஹலட்சுமி என்று கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘கிருஹலக்ஷ்மி’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் வீட்டு தலைவருக்கும் தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

மேலும், “நான் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டால், இந்த திட்டத்தை செயல்படுத்துவார்கள், செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.