டில்லி

காங்கிரஸ் பொதுச் செயலர் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்பதாகக் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது குழந்தைகளின் தொலைப்பேசிகள்  ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி, ‘எனது குழந்தைகளின் சமூக வலைத்தள இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. வேறு வேலை ஆடசியாளர்களுக்கு இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரியங்கா தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்காத நிலையில், மத்திய அரசு தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையை சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

சில மாதங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.