புதுடெல்லி:
காங்கிரஸின் தலைமையை பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிந்தன் அமர்வில் சில தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸின் சிந்தன் அமர்வு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி நாளான இன்று, கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலானோர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சில தலைவர்கள் பிரியங்கா காந்தியை தலைவராக்கலாம் என்ற யோசனையை முன் வைத்ததாகத் தெரிகிறது.

இந்த யோசனைக்கு மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ராகுலை மீண்டும் தலைவராக தேர்வு செய்யலாம் என்று பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டி பிரியங்காவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.