புதுச்சேரி: உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர்  நாராயணசாமி கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் லகிம்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அங்கு நேற்று விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா மகன் மற்றும் உறவினர்கள் சென்ற கார் புகுந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விபத்து மற்றும் வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

உ.பி. மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. புதுச்சேரியிலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில்  காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசார் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்பட சுமார் 50 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்துக்குப்பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய நாராயணசாமி,  . எதிர்க்கட்சிகளை முடக்கும் மோசமான ஆட்சி உத்தர பிரதேசத்திலும் நடக்கிறது. அந்த ஆட்சி தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் பதவி விலகக்கோரியும் நாங்கள் போராட்டம் நடத்தினோம் என கூறினார்.