சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையையும், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற வலைதளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான இணைய முகப்பு வாயிலாக (https://tnschools.gov.in/dms/?lang=en) சுயநிதிப் பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதி, கூடுதல் பிரிவுகள் / மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் பள்ளி நிருவாக மாற்றத்திற்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளையும் இணையம் வழியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பள்ளிகள் அரசின் உரிய அனுமதியை ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையாகவும் விரைவாகவும் பெற இயலும். இதனால் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் பயன்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.