புதுக்கோட்டை: திமுக சொல்றது ஒன்னு; செய்வது ஒன்னு  என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  மகளிர் உரிமை திட்டம் குறித்து   கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது தமிழ்நாட்டுக்கு இழுக்கு என்றும் கூறினார்.

2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 “ஆன்மீக குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நான் சிறு வயதில் இருந்தே பங்காரு அடிகளார் தீவிர பக்தை. ஏற்கனவே திட்டமிட்டபடி புதுக்கோட்டைக்கு வர வேண்டி இருந்ததால், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. வேறொரு நாளில் அவரது குடும்பத்தாரை சந்தித்து அஞ்சலி செலுத்த உள்ளேன் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சனாதனம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறியவர்,  நாம் சனாதனம் குறித்து  தற்போதுதான் பேசி வருகிறோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சனாதனத்தை நிரூபித்தவர் பங்காரு அடிகளார்.பெண்கள் கருவறை வரைச் சென்று பூஜை செய்யலாம் என்று அப்போதே அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தி புரட்சி ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். பெண்களின் சபரிமலை என்று அழைக்க கூடிய அளவிற்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை வடிவமைத்தவர் பங்காரு அடிகளார் என்றார்.

மகளிர் உரிமை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக செய்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை விஷயத்தில் தேர்தலுக்கு முன்பாக ஒரு நிலைப்பாட்டையும் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறியும் உள்ளது. இதனால் பல்லாயிரம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்காமல் உள்ளது.

அரசு, பெண்களுக்கு என்ன தகுதி நிர்ணயம் செய்துள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லை. மகளிர் உரிமைத்தொகை விவகாரம் திமுகவிற்கு பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். நிறைவேற்ற முடியாத திட்டம் என்று தெரிந்தே தேர்தலுக்கு முன்பாக திமுக பொய்யான வாக்குறுதியை அழித்து தற்போது திண்டாடி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு,  தமிழகத்தில் தற்போது  தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது. தேமுதிக எந்த கூட்டணி யில் உள்ளது என்பதை குறித்து நிலைபாடு ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

எதிர்க்கட்சிகளின் ஐஎன்டிஐஏ கூட்டணி  குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெளிவு இல்லை என்று சாடினார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி  குறித்த கேள்விக்கு,  ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி யின் ஜாமீன் மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அமைச்சராக அவரை தொடர செய்வது திமுகவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் இழுக்கு. செந்தில்பாலாஜி முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளார் என்பதையே, இது காட்டுகிறது என்றும் சாடினார்.

மேலும், தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்று குற்றம் சாட்டியவர், போதை இல்லாத தமிழகம் என்று முதலமைச்சர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கும் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படிப்படியாகத்தான் டாஸ்மார்க் கடைகளை மூட முடியும் என்பது உண்மைதான். இருந்தாலும் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் என வலியுறுத்தியவர்,  தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், விற்பனை இலக்கு விரைவில் நிர்ணயம் செய்யப்பட்டு அது 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும்.இளைஞர்கள் பெண்கள் உட்பட அனைவருமே தற்போது மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளது வேதனை  அளிக்கக் கூடியதாக உள்ளது என்றார்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடு உள்ளது.

அனைத்தும் இலவசம் என்று கூறும் அரசு கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். இதை அளிப்பது தான் நல்ல அரசுக்கான அடையாளம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசு நல்லது செய்ததோ அந்த கூட்டணியில் தான் தேமுதிக இருக்கும். இதுவரை தமிழகத்திற்கு யாரும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இவ்வாறு கூறினார்.