சென்னை: கேதர்நாத் கோவிலில்  நடைபெற்ற ஆதிசங்கரர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரர்  கோவில்  கடந்த நவம்பர் மாதம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு,  ஸ்ரீஆதிசங்கரர் சமாதியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான  வீடியோ, காணொலி காட்சி வழியாக தமிழ்நாட்டின் 16 கோயில்களில் ஒளிபரப்பப்பட்டது.

இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில்,  , “பிரதமர் மோடி கேதர்நாத் கோவிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கோயில் நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வு களுக்கு கோவிலில் அனுமதியளிக்க கூடாது என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்து சமய அறநிலைய சட்ட விதிகளை மீறி, உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் பிரதமர் நதேந்திர மோடி, ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்ச்சி, தமிழகத்தில் 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது” என மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோவில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல. இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. மற்றபடி அது அரசியல் அல்ல. மதம் சார்ந்த ஆன்மீக நிகழ்ச்சி தான். இந்த விஷயத்தில் அறநிலையத்துறை எந்த விதிகளையும் மீறவில்லை” என விளக்கமளித்தார்.

இதையடுத்து,  ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை, ஆதி சங்கரர் பற்றிதான் பிரதமர் பேசியுள்ளார் என குறிப்பிட்ட நீதிபதி, அவரது பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.