சென்னை

குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார்.

நாளுக்கு நாள் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.  இதையொட்டி நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கொலிஜியம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

கொலிஜியத்தின் பரிந்துரையைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் அதனை ஏற்கும் விதமாக நான்கு பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஆணை பிறப்பித்தார்.  இத்துடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.