டெல்லி: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வரும் 30ம் தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது.

நேற்று லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று மதியம் குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, மார்ச் 30ம் தேதி காலை அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.