டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர் மசோதாவுக்கு குடியரசு தலைவர்  முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 பேர் குழுவினரே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சர் ஒருவரை நியமித்து “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023” என்ற புதிய திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அரசின் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை இருந்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா  நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து,  இந்த மசோதா  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் முர்மு நேற்று (டிசம்பர் 29ந்தேதி) ஒப்புதல் வழங்கினார்.