சென்னை

திமுக நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 71-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்தார்.  பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து

“இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்பு நிலவுகிறது. நீட் தேர்வு ஒழிக்கப்பட்டால் அதை தே.மு.தி.க. நிச்சயம் வரவேற்கும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை நீட் தேர்வை எதிர்ப்பவர்களிடம் கேளுங்கள்.

இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் எப்படி விலக்கு தர முடியும் என்பதை குடியரசு தலைவர், ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் சொல்லும் போது, மாணவர்களைக் குழப்பி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுவது நிச்சயமாக தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தான்.

எனவே மாணவர்களை குழப்பாதீர்கள். உங்களால் முடிந்தால் இரும்புக்கரம் கொண்டு நீட் தேர்வைத் தடுத்து நிறுத்துங்கள். முடியாவிட்டால் தயவு செய்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.