திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது.  இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள பராச்சாலா என்னும் பகுதியில் உள்ள ஒரு 24 வயதுப் பெண் இந்த வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளார். கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது.

அந்த பெண்மணி ஜூலை 7 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றெடுத்துள்ளார்.   அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கேரளாவை விட்டு எந்த ஒரு வெளியூருக்கும் பயணம் செய்யவில்லை.   அவருடைய  வீடு தமிழக எல்லையில் அமைந்துள்ளது.  ஒரு வாரம் முன்பு அவருடைய தாயாருக்கும் இந்த அறிகுறிகள் இருந்துள்ளன.

இந்த தகவலை அளித்த கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ்,” இது போல் மேலும் சிலருக்கு அறிகுறிகள் இருந்ததால் 13 மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.