ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளை  ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். கடந்த 24மணி நேரத்தில் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்திற்குள் புகுந்து, அவ்வப்போது ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடங்களை கண்டுபிடித்து, ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில்,  புல்வாமா மாவட்டத்தில் உள்ள பூசல் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ராணுவத்தினர் அந்த கிராமர்தை சுற்றி வளைத்து, வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வெளியேற முடியாத நிலையில்,  வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ராணுவம் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிகாலை வரை நீடித்த கடும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக பல்வேறு இடங்களில் மேலும் 3 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொண்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கி இருந்த கட்டிடத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், சிறியவகை ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.