சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி, தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி, அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுமுதல் (பிப்ரவரி 7) தொடங்குகின்றன.
பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளன. சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான முதல்நாள் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும், அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி, தேர்வுகள் மார்ச் 3ல் தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுகளுக்கு முன்பதாக செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான தேர்வுகள் இன்றுமுதல் தொடங்கி உள்ளன.
அதன்படி, பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தேவையான ஆய்வகம் மற்றும் தேவையான ரசயாயனங்கள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்முறைத் தேர்வுகளை சரியாக நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு முக்கிய அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளி யாகியிருக்கும் சுற்றறிக்கையில், தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். –
சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். –
தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.
எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.
மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். அதுபோல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறு உள்ளது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 19ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 19ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்க இருப்பதை அடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தமிழக மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரத்யேகமாக பிறக்கப்பிட்டுள்ள உத்தரவில், “இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றும், மும்முனை இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.