நெல்லை: நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும்  அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் உள்பட 450 அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் தங்கம்தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் பறைசாற்றி உள்ளார்.
நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர பகுதிகளான  ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே துலுக்கர்பட்டி நம்பியாற்றுப்படுகையில் நடத்தப்பட்ட முதல்கட்ட  அகழாய்வுப் பணிகளை ஏற்கனவே தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். அங்கு தமிழர்கள் பயன்படுத்திய குவளை, பாசி, மணிகள், ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து 2வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.  துலுக்கர்பட்டி அருகே கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இப்பகுதி விளாங்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம், அணிகலன்கள் உள்ளிட்ட 450 அரிய வகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட 1,009 அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மேலும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளிநாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருந்தன. இவற்றை டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாகவும், இப்பகுதி இரும்புகால வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தொல்லியல் துறை இயக்குநர் வசந்தகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் துலுக்கர்பட்டி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ள டிவிட்டில்,  அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன். அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்.

இவ்வாறு கூறியுள்ளார்.