கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில்,  இன்று பிற்பகல் 1மணிக்கு மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் , மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுல ரமணன்  மறு பிரேத பரிசோதனை செய்கின்றனர். இதன் காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுஉடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் அமைத்துள்ள மருத்துவ குழு மருத்துவமனைக்கு வந்துள்ளது. ஆனால் மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட யாரும் அங்கு வரவில்லை. தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட மாணவியன் தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால், மறு உடற்கூறாய்வு செய்வதற்கான சிக்கல் விலகியது. இதைத்தொடர்ந்து,  மாணவி உடல் பிற்பகல் 1 மணிக்கு மறுகூறாய்வு செய்யப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்தார். அது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறுஉடற்கூராய்வு  செய்யும் இடத்தில் பெற்றோர் இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உடற்கூறாய்வுக்கு மாணவிய்ன  பெற்றோர் யாரம் வராத நிலையில், அவர்கள் இல்லாமல் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.