சென்னை; மத்தியஅரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் கூட்டாளிகளான மேலும் 8அமைப்புகளுக்கும்  5ஆண்டு காலத்திற்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த இயக்கங்களை,  சட்ட விரோதமான இயக்கமாக அறிவித்து தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால்,  மத்தியஅரசின்  இந்த தடையை தமிழ்நாட்டில் திமுக அரசு நிறைவேற்றுமா என்பது போகப்போகத்தான் தெரிய வரும்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களுடன் நெருக்கம் காட்டி, இந்திய இறையாண்மைக்கு எதிராக கலகம் ஏற்படுத்தி வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதை சார்ந்த அமைப்புகளின் அலுவலகங்களில் என்ஐஏ அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு ஏராளமானோரை கைது செய்த நிலையில், தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும்,  அதனைச்  சார்ந்து இயங்கும் 8 அமைப்புகளும் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  PFI ஆனது “சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை தீவிரமயமாக்குவதற்கான ஒரு ரகசிய நிகழ்ச்சி நிரலை பின்பற்றுகிறது” என்றும்,  “நாட்டின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு எதிரான அவமரியாதையை” இந்த அமைப்பு காட்டுகிறது என தெரிவித்தள்ளது. மேலும், இந்த அமைப்பு, அதன்  துணை நிறுவனங்களுடன்  “ஹப் மற்றும் ஸ்போக்” உறவைக் கொண்டுள்ளன. இந்த அமைப்புகள் அதன் திறனை வலுப்படுத்தும் வகையில்,  “வெகுஜன பரவல் மற்றும் நிதி திரட்டும் திறனை” பயன்படுத்துகிறது உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதன்படி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்  கூட்டாளி இயக்கங்களான

  1. Rehab India Foundation(RIF) – ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்
  2. Campus Front of India(CFI) – கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,
  3. All India Imams Council(AIIC) – ஆல் இந்தியா இனாம்ஸ் கவுன்சில்
  4. National Confederation of Human Rights Org(NCHRO), – நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன்
  5. National Women’s Front -நேஷனல் உமன் ஃபிரண்ட்,
  6. Jr Front – ஜூனியர் ஃபிரண்ட்
  7. Empower India Foundation – எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அண்ட் ரிஹாப் பவுண்டேஷன்
  8. Rehab Foundation, Kerala

மற்றும் அதன் கூட்டாளிகளை , சட்டவிரோத இயக்கங்களாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து பிஎஃப்ஐ அமைப்பு போராட்டத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு இந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதித்திருந்தாலும், இதன் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வரும்,  தமிழ்நாடு திமுக அரசு, மேற்குவங்க மம்தா அரசு போன்றவை மத்தியஅரசின் தடையை அமல்படுத்துமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழகம் தலைவணங்குமா அல்லது எதிர்த்து நிற்குமா என்பது  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Rehab India Foundation: டெல்லியை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த அமைப்பு. பல்வேறு விஷயங்களை இலக்காக நிர்ணயித்து கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்துள்ளது. பிகார், ஆந்திரப் பிரதேசம், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின்மீது மதமாற்றம் உள்பட பல்வேறு புகார்கள் உள்ளன.

Campus Front of India: இது மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த இஸ்லாமிய அமைப்பாகும். சிஏஏவிற்கு எதிரான போராட்டங்கள், ஹிஜாப் போராட்டங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள், மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மாணவர்களிடையே வன்முறையை தூண்டி விடுவ தாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

All India Imams Council: இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஓர் அமைப்பாகும். இதில் மத குருமார்கள், பிரார்த்தனை தலைவர்கள், மத ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

National Confederation of Human Rights Organization: இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து செயல்பட்டு வந்த ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி,பழங்குடிகள், தலித்கள்,  பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பெண்கள், குழந்தைகள் மற்றும் வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கா போராடுவதாக தெரிவித்துள்ளது.

National Women’s Front: பாப்புலர் ஆஃப் இந்தியாவில் பெண்களுக்காக தனியாக இயங்கி வந்த ஓர் இஸ்லாமிய அமைப்பாகும். இதுவும் பல்வேறு விதமான போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறது. ஹிஜாப் போராட்டத்தில் இவர்களின் பங்கு உண்டு என கூறப்படுகிறது.

Empower India Foundation and Rehab Foundation, Kerala: கேரளாவை மையமாக வைத்து செயல்பட்டு வந்த ஓர் அரசு சாரா அமைப்பாகும். ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அமைப்பு மீது கேரளாவில் பல வழக்குகள் உள்ளன.