மும்பை: சென்னை அணிக்கு எதிரான தனது முதல் போட்டியை, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அசத்தலாக வென்றது டெல்லி அணி.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் அடித்தார்.

பின்னர், சற்று கடின இலக்க‍ை விரட்டிய டெல்லி அணி, துவக்கத்திலேயே எந்தவித பதற்றமும் இல்லாமல் வெளுத்து வாங்கியது. சென்னை பெளலர்கள் சூழ்நிலையை உணர்ந்து பந்து வீசாமல், தொடர்ந்து தவறுகளை செய்தனர்.

இதனால், பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் அதிரடியைக் காட்டினர். ஷா 72 ரன்களையும், தவான் 85 ரன்களையும் அடித்து அவுட்டானார்கள். இவர்கள் இருவருமே வெற்றியை உறுதிசெய்த நிலையில், பின்னால் வந்தவர்களுக்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை.

முடிவில், 18.4 ஓவர்களிலேயே, 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த டெல்லி அணி, 190 ரன்களை எடுத்து, 7 விக்கெட்டுகளில் வென்றது.

சென்னை சார்பில், ஷர்துல் தாகுருக்கு 2 விக்கெட்டுகளும், பிராவோவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன. பெரிய ரன்னை ஸ்கோர் செய்தும், மோசமாக தோற்றதானது, சென்னை ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.