ஈரோடு
கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆம் முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிப்பு நடைபெறுகிறது..
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்லில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 402 வாக்காளர்களில், 1 லட்சத்து 48 ஆயிரத்து 676 பேர் வாக்குப்பதிவு செய்தனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 62 ஆயிரத்து 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட யுவராஜா 56 ஆயிரத்து 4 வாக்குகள் பெற்றார்.
திருமகன் ஈவெரா இறந்ததால் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2 ஆவது முறையாக இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக எம்.எல்.ஏ.வை வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்கள், 37 3-ம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.