கவுகாத்தி: அசாமில் ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவாக தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கிராமத்தின் தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. அவரின் வேண்டுகோளை ஏற்று அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர்களும் வாக்குப்பதிவை நடத்தி உள்ளனர்.

இந் நிலையில் 90 வாக்குகளுக்கு பதில் 171 வாக்குகள் பதிவானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் அங்கு தேர்தல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் அவர் பரிந்துரைத்து உள்ளார்.