மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதிவரை முதலிடத்தில் இருந்து வந்த அபிசித்தருக்கு கார் பரிசு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் ‘ அரசியல் பண்ணிவிட்டார்கள்; இது அமைச்சர் மூர்த்தியின்  சதி’ மாடுபிடி வீரர் அபிசித்தர்   நேரடியாக குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இதற்கு அமைச்சர் பதில் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று  விறுவிறுப்பாக நடைபெற்றது. 10 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் ஒன்பதாவது சுற்று முடிவில் 710 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபிசித்தர் ஆகியோர் தலா பதினோரு காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர். பின்னர் இருவரும் 17காளைகளை பிடித்த நிலையில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்று கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இறுதி சுற்றுக்கான கடைசி ஐந்து நிமிடத்தில் அவிழ்க்கப்பட்ட மூன்று காளைகளில் ஒரு காளையை கார்த்திக் பிடித்தார். இறுதியில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அபிசித்தர் 2ஆம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால்,  கடைசி நேரத்தில் விதிமீறல் நடைபெற்றதாக குற்றம் சாட்டி  அபிசித்தர் பரிசு வாங்க வராமல் புறக்கணித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேலூர் குணா என்பவரின் கட்டப்பா எனும் காளை முதல் பரிசும், மதுரை காமராஜர்புரம் வெள்ளைக்காளி என்பவரின் காளை சவுந்தர் இரண்டாம் பரிசும் பெற்றது.

கார் பரிசு பெற்ற கார்த்திக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும், அபிசித்தர் 2023 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  கார்த்திக்கிற்கு முதல் பரிசாக காரும், அபிசித்தருக்கு பைக்கும் பரிசளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய  அபிசித்தர் என்ற இளைஞர்,  நான் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்தவன். கடந்த 2023 ஆம் ஆண்டு இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகளை பிடித்து முதல் பரிசு வாங்கினேன். ஆனால் 26 மாடு தான் பிடித்தேன் என்று அறிவித்தார்கள். அப்பொழுதும் அரசியல் பண்ணிவிட்டார்கள். இந்த அரசு ஜல்லிக்கட்டு போட்டியில்  அரசியல் தான் பண்றாங்க. இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம். போன ஆண்டு இந்த வருஷம் முதலிடம் அறிவித்துள்ள கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் ரெக்கமண்டில் வந்தார்.

வேண்டுமென்றால் சக வீரர்கள் எல்லாரையும் கேட்டுவிட்டு இதற்கு ஒரு நியாயம் கொடுக்க வேண்டும். இன்றைக்கும் கார்த்திக் ரெக்கமெண்டில் தான் உள்ளே வந்தார். மூணு பேட்ஜில் மாடு பிடித்திருக்கிறார். நான் ரெண்டு பேட்ஜில் தான் மாடு பிடிச்சிருக்கேன். அவர் மட்டும் எப்படி மூன்று பேட்ஜில் மாடு பிடிக்கிறார் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி போலீசாரால் என்னை அடித்து வெளியே விரட்டி விட்டார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஆகியுள்ளது.

நான் 17 மாடு பிடிச்சிருக்கேன். அவரும் 17 மாடு பிடிச்சி இருக்காரு. ஆனால் இதை கமிட்டியாளர்கள் கண்டறியாமல் அவருக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்துட்டாங்க. இது முழுமையாக அமைச்சரின் சதி. விளையாட்டை விளையாட்டாக வைத்திருக்க வேண்டும். இதில் அரசியலை இழுத்து விடக்கூடாது.

நான் நீதிமன்றத்திற்கு போகப் போறேன். வீடியோ பார்த்து யார் முதலிடம் என கண்டறிந்து அதே இடத்தில் மேடை போட்டு அறிவிக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த  அமைச்சர் மூர்த்தி, விதிகளின் படியே போட்டி நடைபெற்றது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. விழா குழு முடிவின்படியே பரிசுகளை வழங்கியுள்ளோம். ”இங்கே எல்லோருமே சரியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்குமே சம வாய்ப்பு இருந்தது. அதில் இரண்டு வாய்ப்பு கார்த்திக்கு நழுவிப் போனது. இருவரும் சமநிலையில் இருந்து கடைசியாக கார்த்திக் கூடுதலாக ஒரு மாடு பிடித்ததால் முதலிடம் பிடித்துள்ளார். இது நேரடியாக மீடியாக்களில் வந்து கொண்டிருக்கிறது. இதில் யாருடைய பாகுபாடும் இல்லாமல் எல்லாருடைய கண்காணிப்பிலும் இது நடந்தது. எல்லாவற்றுக்கும் வீடியோ இருக்கிறது. வீடியோவில் எந்த குளறுபடியும் இல்லை. இந்த ஜல்லிக்கட்டு யாருக்கும் பாகுபாடு இல்லாமல், எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி இருந்தார்கள்” என்றார்.