டில்லி

மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மிசோரம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வரும் இந்த மாநிலத்தில் நவம்பர் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3 அன்று இந்த வாக்குகள் எண்ணப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்கு எண்ணப்படும் டிசம்பர் 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த தேதியை மாற்ற வேண்டும் என மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. மாநில கிறிஸ்தவர்களின் பேரமைப்பும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘ஞாயிற்றுக்கிழமைகள் கிறிஸ்தவர்களுக்குப் புனிதமானவை. அன்று அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் தேவாலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. எனவே வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மிசோரம் மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளன.