காரைக்குடி

பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய கவுதமி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இவர் ஒரு புகார் மனுவை அளித்தார்

அந்த புகார் மனுவில்,

”நான் எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவச் சிகிச்சைக்காக எனக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாகக் கூறியதால் எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) வழங்கினேன்.

ஆனால் போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.  நான் இது பற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆகவே, எனக்குச் சொந்தமான இடத்தை மீட்டு தந்து, நிலத்தை அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

என்று கூறியிருந்தார்.

நடிகை கவுதமி பாஜக கட்சியில் புகார் அளித்தும் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி பாஜக வில் இருந்து வெளியேறினார்.  தற்போது நடிகை கவுதமி அளித்த இந்த நிலமோசடி புகாரில், காரைக்குடி கோட்டையூரில் உள்ள அழகப்பன் என்பவரது வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.