சென்னை: நேரு ஸ்டேடியத்தில்  பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது.  பணிச்சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை முடிவை நாடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பணியில் அமர்ந்த சைலேந்திரபாபு,  காவலர்கள் தற்கொலையை தடுக்க அவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை, வார விடுமுறை போன்றவை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பணியில் இருந்த சக காவலர்கள் மட்டுமின்றி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவலர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.