சென்னை: பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெறும் என தெரிவித்தார்.

ஜனவரி 12ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து அவர் பாஜகவின் பொங்கல் நிகழ்ச்சி மற்றும் புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவரது மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 12ந்தேதி புதுச்சேரி வருகை தருவதாக இருந்த பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதை உறுதிப்படுத்தியவர், அந்த நிகழ்ச்சியில் பிரதமர் காணொளி மூலமாக பங்கேற்பார் என்றார்.

மேலும், புதுச்சேரி மக்களுக்கும் பொங்கல் இலவச தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.490 மதிப்புள்ள பரிசு தொகுப்பு தரப்படும் என்றும் கூறினார்.