டெல்லி: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயக்கப்படும், ராப்பிடெக்ஸ் (India’s first Rapid Rail train, called RAPIDX)  எனப்படும்  இந்தியாவின் முதல் அதிவேக  மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி  நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் வந்தேபாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இது 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது.  இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக,  மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை  தொடங்கப்பட உள்ளது.

இந்த சேவை இந்தியாவில் முதன்முதலாக தலைநகர் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.  இந்த  பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையை (RRTS – Regional Rapid Transit System) பிரதமர் மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் இவடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய ரயில்வே தண்டவாள கட்டமைப்பு, 160 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் வகையில் உள்ளதால், 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த ரயிலில், 6 குளிர்சாதன வசதிகொண்ட நவீன பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு சொகுசு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டியும், ஒரு பெண்கள் பெட்டியும், 4 சாதாரண பெட்டிகளும் இருக்கும். இருபுறமும் தலா 2 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயிலின் ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்க முடியும் .

இந்த ரயில் 180 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றால்,  தற்போதைய வழித்தடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் இந்த ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லி முதல் மீரட் இடையே ரூ.30,274 கோடி செலவில் இந்த ரெயில் சேவையை தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 82 கி.மீ தூர வழித்தடத்தில் 25 ரெயில் நிலையங்கள் 2 பணிமனைகள் அமைந்துள்ளன. இதில் 68.03 கி.மீ நிளத்திற்கு உயர்மட்ட பாதையாகவும், 14.12 கி.மீ நிளத்திற்கு சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக துஹாய் முதல் சாஹியாபாத் இடையேயான 17 கி.மீ தூர ரெயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லி முதல் மீரட் இடையேயான முழு நீள ரெயில் சேவை வரும் 2025ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.