டில்லி

மோடி மற்றும் அமித்ஷா குறித்த தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் மீது 6ந்தேதிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் காரணமாக மாநில தேர்தல் அலுவலர்கள் பிசியாக இருப்பதால், தேர்தல் விதி மீறல் தொடர்பாக ஆராய முடியவில்லை என்று தெரிவித்து உள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணை 8 ந்தேதிக்கு தள்ளி வைத்த உச்சநீதி மன்றம், அன்று இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறி  வழக்கை 8ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும்  இறுதிக்கட்டத்தை நெருக்கி வரும் நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் தேர்தல் நடத்தை விதி மீறி செயல்பட்டு வருவதாகவும், அவர்கள்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் 6ந்தேதிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும், மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதி மீறல் குறித்து வரும் 6ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் வாக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் மேலும் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கை 8ந்தேதி (புதன்கிழமை)க்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்தது.