டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து பிரிவான 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக வரும் 24ந்தேதி காஷ்மீர் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து கடந்த 2018ம் ஆண்டு செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரு பகுதியாக பிரிக்கப்பட்டு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தும்,  பிரிக்கப்பட்ட லடாக்கை  குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, காஷ்மீல் உள்ள முன்னாள் முதல்வர்கள் உள்பட  அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் (Public Safety Act) பெயரால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். பின்னர் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  ஜூன் 24-ல் டெல்லியில் காஷ்மீரின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.  கூடவே, காஷ்மீரிலும், ஜம்முவிலும் தேர்தல் நடத்த வலியுறுத்தப்படடது. இதையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக 2021 ஜூனில் அறிவிக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஷெபாஸ் ஷெரீஃப், பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘காஷ்மீர் உட்பட நிலுவையில் இருக்கும் பிரச்சினை களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தகைய சூழலில், பிரதமர் மோடி வரும் 24ந்தேதி முதன்முறையாக காஷ்மீர் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஜம்முவில் பஞ்சாயத்து பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. “ஒரு விரிவான பயணம் மற்றும் அவரது திட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன, ஆனால் பிரதமர் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜம்முவில் இருப்பார்” என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.