ஆன்மீக யாத்திரை – சபரிமலை  –  இரண்டாம் பகுதி

புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் ‎கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். ‎

அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ‎பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் ‎வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் ‎முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க ‎வேண்டும்,

மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் ‎கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் ‎கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். ‎மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள ‎பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது ‎விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய ‎நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், ‎மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, அனுட்டித்து வருகின்றனர்.

பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளுக்குக் காரணமாக பின்பவருவன சொல்லப்படுகின்றன: முற்காலத்தில் “பெரிய பாதை” மட்டுமே இருந்தது. காட்டின் வழி செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகு தூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும்

எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்றுச் சென்றனர். குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகியன போன்றும், இப்புனித யாத்திரையை மேற்கொள்ளும்போது ஏற்படகூடிய நிகழ்வுகளுக்காக பயணிகளைத் தயார்படுத்தும் முறையாக இவ்வழி முறைகள் உதவும்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய ‎தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன், ‎எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் ‎காட்டு மலைப்பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் ‎கொண்டது) காலணிகள் அணியாமல், நடந்து செல்வதையே ‎விரும்புகின்றனர்.

இந்தப் பயணத்தின் முதல் பகுதி, ‎எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு ‎செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை ‎அடைய வேண்டும். இப்பொழுது புனிதமான கரிமலையை ‎ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், ‎வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து முடிவில் பம்பா ‎நதியைச் சேரும். ‘திருவாபரண கோஷப் பயணம்’ ‎மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற இடத்தில் ‎தங்கிச் செல்ல வேண்டும்.

ஆனால் புனிதப் பயணத்தை ‎மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து ‎மாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். ‎அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ‎சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய ‎‎(நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய ‎வேண்டும். ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ‎இந்த ஒற்றைவழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு ‎பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ‎சாலையாக காணப்படுகின்றன.

‎நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் 2011 முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்காக ஏற்பாட்டினை செய்துள்ளது.

To read part 1 click https://patrikai.com/pilgrim-yathra-to-sabarimalai-first-part/