புதுச்சேரி

புதுச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி, இரவில் பெண்களின் பாதுகாப்பை பரிசோதிக்க ரகசியமாக பைக்கில் தனது உதவியாளருடன் செல்கிறார்.

புதுச்சேரியின் பெண் கவர்னர் கிரண்பேடி அவர் திகார் சிறையில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே பரபரப்பாக பேசப்படுபவர்.  தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தாம் பெண்களின் பாதுகாப்பை பரிசோதிக்க தினமும் பைக்கில் தனது பெண் உதவியாளருடன் ரோந்து செல்வதாக தெரிவித்துள்ளார்.   அதற்கான புகைப்படத்தையும் வீடியோ பதிவையும் பதிந்துள்ளார்.

இந்த புகைப்படமும் வீடியோவும் இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.   அந்தக் காலத்தில் அரசர்கள் நகர் உலா வந்து நீதியை நிலை நாட்டியது போல இப்போது கிரண் பேடி நகர் உலா வருவதாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.   அவருடைய எதிர்ப்பாளர்கள் இது ஒரு மலிவான விளம்பர யுக்தி என கூறுகின்றனர்.   ரகசியாமாக செல்வதாக கூறுபவர், அதை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி கேட்கின்றனர்.

தனது இரவு நேர நகர் உலா பற்றி கிரண் பேடி, “நானும் என் பெண் உதவியாளரும் எந்த வித பாதுகாப்பும் இன்றி பைக்கில் சென்றோம்.  நகரின் பாதுகாப்பு நன்றாக இருந்தாலும் இன்னும் அதை மேம்படுத்த வேண்டும்.” என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் அனைவரும் அவசியம் ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார்.   ஆனால் பைக்கை ஓட்டிய பெண்ணும் கிரண் பேடியும் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதே நேரத்தில் இவர்களை புகைப்படம் எடுத்த இரண்டு ஆண்களை அழைத்து ஹெல்மெட் அவசியம் அணிந்தாக வேண்டும் என அறிவுரை வேறு அளித்துள்ளார்.