புதுடெல்லி: ஏற்கனவே கொரோனா தொற்றியவர்களுக்கு, Pfizer-BioNTech தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் ஏற்றப்பட்டாலே, நல்ல பலனைத் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது, சம்பந்தப்பட்ட நபருக்க எப்போது கொரோனா தொற்றியது, அவர் உடலில் ஏற்கனவே ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டதா? என்பது குறித்த மாறுபாடுகள் இல்லாமல், அந்த தடுப்பு மருந்தின் ஒரு டோஸே நல்ல பலனைத் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாட்டிலுள்ள பார்-இலன் பல்கலைக்கழகம் மற்றும் ஸிவ் மெடிக்கல் சென்டர் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குறிப்பிட்ட தடுப்பு மருந்தின் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் உற்சாகமூட்டக்கூடியதாக இருந்தாலும், நடைமுறை ஆதாரங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன என்கின்றனர்.

குறிப்பாக, SARS-CoV-2 வைரஸால், முன்னதாகவே தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, இந்த தடுப்பு மருந்தினால் ஏற்படும் விளைவுகள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.