டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வும், அதற்கு மத்திய அமைச்சர் கூறியுள்ள தான்தோன்றித்தனமான விளக்கமும்  சாமானிய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் லிட்டருக்கு 100ஐ தாண்டியது. தமிழகத்தில் நேற்று முன்தினம் கொடைக்கானல் பகுதியில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில், இன்று கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியிலும் லிட்டர் பெட்ரோல் விலை  100 ரூபாய் 20 காசாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, தினசரி பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த விலையானது மாநிலத்தில் வசூலிக்கப்படும் வாட் மற்றும் சரக்குக் கட்டணங்கள் போன்ற உள்ளூர் வரிகளை பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம்  வேறுபடுகின்றன. கடந்தாண்டு கொரோனா பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், அதில் மத்திய அரசு மண்ணை அள்ளி போட்டது. கலால் வரியை உயர்த்தி பொதுமக்களுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் செய்தது. பின்னர் தமிழகம் உள்பட 5 மாத சட்டமன்ற தேர்தல் காரணமாக விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பங்டடிருந்தது. தேர்தல் முடிந்ததும், பெட்ரொல் மற்றும் டீசல் விலையும் தினமும் உயர தொடங்கியது.

கடந்த மே 4ம் தேதி முதல் 22 முறை பெட்ரோல் விலை உயர்ந்ததால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

. மெட்ரோ நகரங்களில் மும்பையில்தான் முதலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100ஐ தொட்டது. தமிழகத்தில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று 23வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் லிட்டருக்கு 23 பைசாவும் உயர்ந்தன. இதனால், இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் 100ஐ தாண்டி மக்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் 7வது மாநிலமாக கர்நாடகாவும் சதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பீதர், பெல்லாரி, கொப்பல், தாவணகரே, ஷிவ்மொக்கா, சிக்கமகளூர் ஆகிய பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100ஐ தாண்டியது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெட்ரோல் லிட்டர் 99.39, டீசல் 92.27க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெங்களூருவிலும் பெட்ரோல் விலை 100ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல்  விலை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், அத்தியவாசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்கறி விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,   “பெட்ரால், டீசல் விலை உயர்வு மக்களுக்கு சிக்கலாக இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது ஒன்றிய, மாநில அரசாக இருந்தாலும், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் ரூ .35,000 கோடிக்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது.

மேலும் நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை சேமிக்கிறோம். ஏழைகளுக்கு எட்டு மாத அரசி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனாவுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமரின் கிசானின் கீழ் சில ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நெருக்கடியாக காலங்களில், நலத்திட்டங்களுக்காக செலவிட பணத்தை மிச்சப்படுத்துகிறோம். உள்ளூர் வரி மற்றும் அவை மீது விதிக்கப்படும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.

இதன் காரணமாக, தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 

மத்தியஅமைச்சரின் தான்தோற்றித்தனமான பதில் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.