சென்னை

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று அ.தி. மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைய்ட்டி ஓ.பன்னீர்செல்வம், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்துள்ளார்.

அவர் அந்த மனுவில்,

‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் பொதுக்குழுவைக் கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள சிவில் வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று இறுதி உத்தரவோ, தீர்ப்போ வழங்கப்படவில்லை.  

ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் நான் கையொப்பம் இடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடாக இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்கலாம். இதில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பொதுவான சின்னம் வழங்க வேண்டும்”. 

என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும் அதிகாரத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு தரக்கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மேலும் ஓர் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் அளித்துள்ளனர்

மனுவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்த லில் வழங்கியது போல தற்போதும் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கு வழங்க வேண்டும். அ.தி.மு.க. (ஓபிஎஸ்) என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.