டெல்லி:

பீட்டாவின் விருதை பெறக்கூடாது என்று தடுக்க சட்டத்தில் இடமில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த ஓய்வுபெற்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தான் அப்போது தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்து, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்

‘‘இவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில இவருக்கு ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ என்ற விருது வழங்கப்படும் என பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.

‘‘ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டா அமைப்பு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு சாதகமான தீர்ப்பு கூறிய ஒரு நீதிபதி இந்த விருதை பெற தகுதி கிடையாது. விருது பெறுவது சட்டவிரோதமானது. பிழையானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜல்லிக்கட்டு அமைப்பை சேர்ந்த சேலை சக்ரபாணி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை க்கு ஏற்ற நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்க ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிம்னறத்தில் ராதாகிருஷ்ணன் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நான் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சாதாரண பொதுமக்களில் நானும் ஒருவனாக ஆகிவிட்டேன். அதனால் விருது பெறுவதை தடுக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை.

நீதிபதிகளின் நீதிமன்ற செயல்பாடுக்கு எதிராக நீதிமன்றமோ, வேறு எந்த அமைப்புகளோ ஒரு நீதிபதிக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. அதனால் இது அற்பத்தனமான வழக்கு. ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்வுக்கு பிறகு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தான் சட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 13ம் தேதி நடக்கிறது