டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், தொலைதொடர்புத்துறை அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், மத்தியஅரசோ, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் சில சட்ட மசோதாக்களை நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளன. ஏற்கனவே இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட்டு, 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவைஅமைத்தது. ஆனால், கடந்த 2021 ஜூலை 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இஸ்ரேலுடன் 2017ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸை வாங்கியது இந்திய அரசுதான் என்று அமெரிக்க நாளேடான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இந்த நிலையில், மத்திய தொலைதொடர்புத்துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எதிராக  எதிக்கட்சி எம்.பி.க்கள், ‘நாடாளுமன்றத்துக்கு தவறான தகவலைத் தெரிவித்ததாக’ உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருக்கின்றனர்.

இதுகுறித்து கூறிய காங்கிரஸ் எம்.பி. கே.சி வேணுகோபால், பெகாசஸ் விவகாரத்தில் அமைச்சர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டார். பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக உலகின் நம்பகமான நாளிதழ் கூறுகிறது. அதனால் நாங்கள் உரிமை மீறல் நோட்டீஸை அளித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், “அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசின் உண்மை முகத்தையும், பெகாசஸ் பற்றிய உண்மைகளையும் மறைக்க முயன்றுள்ளார். அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உண்மையான தகவலைக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.