டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களின் டெலிபொன்கள் இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டு உள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ராகுல்காந்தி,  முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி மற்றும் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் எதிரொலித்துவருகிறது. பெகாசஸ் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கிய எதிர்க்கட்சிகள் இன்றும்,  பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பிற்பகல் அவை தொடங்கியதும மக்களவையில்அமளி நீடித்ததால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.