புதுச்சேரி
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு பஞ்சு மிட்டாய் விற்க தடை விதித்துள்ளார்.
![](https://patrikai.com/wp-content/uploads/2024/02/cotton-candy-e1707478883542.jpg)
தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் பல இடங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர்.
சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த பஞ்சுமிட்டாயில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ரோடமைன் பி எனப்படும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவை புற்றுநோயை உண்டாக்கக் கூடியதாகும் , சிறு குழந்தைகள் இதை உண்ணும்போது எளிதாகப் புற்றுநோய் பாதிக்க பெரும் அளவில் வாய்ப்பு உள்ளது என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனையைத் தடை செய்ய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில்,
“புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகித் தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையைத் தொடங்கலாம், இதனை மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் ”
என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.