புதுச்சேரி: மாநிலஅரசு ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளது. இனிமேல் முடிவு எடுக்க வேண்டியது ஆளுநர் தமிழிசைதான் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், அங்கு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில்,  காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சியை கவிழ்த்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவையைவிட்டு வெளியேறிய நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான். நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தான் வாக்களிக்க உரிமை உண்டு. நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.