பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் அதன் பொருட்களை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பெரியதாக இல்லாமல் பூதக்கண்ணாடி வைத்து தேடுமளவுக்கு சிறியதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அதனை பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் போலி விளம்பரங்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் துறைகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது 2018 முதல் போலி விளம்பரங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக தகவல் ஒளிபரப்பு துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.