சென்னை:  பெண்களுக்கான இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் சாதி, வயது விவரம் சேகரிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அமைச்சர் விளக்கம் சிவசங்கர் விளக்கம்  அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பெண்களுக்காக இயக்கும் இலவச பேருந்து, பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில், ஏழை பெண்கள் பயனடையும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயணத்தை  லட்சம்  அளவில் சம்பளம் பெறும் தலைமைச்செயலக பெண் ஊழியர்கள் உள்பட பல அரசு பெண் ஊழியர்களும் இலவச பேருந்து சேவையை பயன்படுத்துவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் நிற பேருந்துகளில் பயணம் செல்லும் பெண்களை ‘ஓசி டிக்கெட்’ என்று திமுக அமைச்சர்களே விளித்து பேசியதும், அதிகாரிகள் முதல் பேருந்து நடத்துனர்கள் வரை பலரும்  அவமரியாதை செய்வதும் ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களாக, இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் 15 வகையான விபரங்களை சேகரித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவரங்களில், பெண்களின் வயது, அவர்கள் சாதி என்ன என்பது உள்பட பல கேள்விகள் சேகரிக்கப்பட்ட விவாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமத்துவம் பேசும் தமிழ்நாடு அரசு சாதிகளை கேட்பது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். அவர் விடுத்த அறிக்கையில்,  ‘கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களுடைய பெயர், வயது, மொபைல் எண், ஜாதி போன்ற 15 விபரங்களை அப்பேருந்து நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் இவ்விவரங்களை பூர்த்தி செய்ய இந்த திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, பெரும்பாலான சாதாரண பேருந்துகளை விரைவு நகரப் பேருந்துகள், சொகுசுப் பேருந்துகள் என்று மாற்றிவிட்டு சாதாரண பேருந்துகளின் ஓட்டத்தைக் குறைத்து விட்டதாகவும், அலுவலக நேரத்தில் பிங்க் நிற பேருந்துகள் அதிகப்படியாக இயங்காததால், பெரும்பாலான அலுவலகம் செல்லும் பெண்கள் மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யக்கூடிய நிலைமையும், பிங்க் நிற பேருந்துகளில் பயணம் செல்லும் பெண்களை ‘ஓசி டிக்கெட்’ என்று அவமரியாதையாக நடத்துநர் முதல், அமைச்சர் வரை அழைத்த நிகழ்வுகளும் என்று, இந்த அரசின் மீது பெண்கள் வைத்த குட்டுகள் அதிகம். இந்நிலையில், இப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் 15 வகையான விபரங்களை சேகரிப்பது, கட்டணமில்லா பேருந்தில் பயணம் செல்லும் பெண்களை ஏன் இப்பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளதாகவும், இது சம்பந்தமாக நடத்துநருக்கும். பெண்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, பெண்களிடம் அவர்களது பெயர், வயது மற்றும் மொபைல் எண்ணைக் கேட்பது, அவர்களுடைய தனி உரிமையில் தலையிடுவது போலாகும். அதுவும், மொபைல் எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அப்பெண்களுக்கு அருகில் உள்ளவர்களும் அவர்களின் மொபைல் எண்ணைக் குறிப்பெடுக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஒருசில நடத்துநர்களோ, அல்லது மொபைல் எண்ணை குறிப்பெடுத்த அருகில் உள்ளவர்களோ அப்பெண்களிடம் பேச முயற்சி செய்யக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பெண்களின் மொபைல் போனுக்கு வேண்டாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கும் வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும் விட, பயணம் செய்யும் பெண்களிடம் நடத்துநர்கள், நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. உலகில் எங்கேயும் பேருந்து, ரயில், விமானம் மற்றும் கப்பல் போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர் எவரிடமும் எந்த அரசும், எந்த போக்குவரத்து நிறுவனங்களும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டதில்லை. ஏற்கெனவே, சில மாவட்டங்களில் சாதிய ரீதியாக வேண்டாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்வுகளை திமுக அரசால் இதுவரை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், இந்த விபர சேகரிப்பு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளை இந்த அரசு சிந்தித்ததா என்று தெரியவில்லை. இதுபோன்ற மக்களை தூண்டிவிடக்கூடிய சென்சிட்டிவ் நடவடிக்கைகளை இந்த திமுக அரசு செயல்படுத்துவதற்கு முன்பு, மூத்த அமைச்சர்களையோ அல்லது அனுபவம் வாய்ந்த அதிகாரிகளையோ முழுமையாக கலந்தாலோசித்ததா? இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று சிந்தித்ததா? என்பது தெரியவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழக மக்களுக்கு அரசின் முதலமைச்சருடைய நிர்வாகத் திறமையின்மை மீண்டும் ஒருமுறை தெள்ளத் தெளிவாக்கியுள்ளது. திமுக அரசின் போக்குவரத்துத் துறையின் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடனடியாக இதுபோன்ற புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன்’ என சாடியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் போது, அந்த திட்டம் மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்று ஆராய்ந்து, அதை இன்னும் செம்மைப்படுத்த முனைவது அரசின் கடமை. அந்த வகையில்தான் மாநில திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆய்வின் முடிவில், கட்டணமில்லா பயணம் மூலம் சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.88 பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரியவந்தது. அதன் அடுத்த கட்ட ஆய்வு தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு இந்த திட்டம் பயன்படுகிறது என்று ஆய்வு அறிக்கை யின் அடிப்படையில் அறிந்து, அதை இன்னும் கூர்மைப் படுத்துவதுதான் இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ளது.